தமிழக அரசால் தீவிரவாதிகள் என்று சொல்லப்பட்ட அணு உலைப் பெண் போராளிகளுக்கு விருது
போப்பாலில் இயங்கி வரும் சிங்காரி அறக்கட்டளை ஆண்டு தோறும் பெரு நிறுவனங்களின் குற்றத்திற்கு எதிராக போராடிவரும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கம் . இந்த ஆண்டு அணு உலைகளில் இருந்து நாட்டை காக்கும் சிறந்த போராளிகள் இடிந்தகரை , கூடங்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் என்று சிங்காரி அறக் கட்டளை அடையாளம் கண்டு இப்பெண்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் , 13 கிலோ வெண்கல சிலையும், கேடயமும், சான்றிதழும் , விருதும் கொடுத்து கௌரவித்து உள்ளது.
இதற்காக இடிந்தகரையில் இருந்து இரு பெண்கள் ராணி தாசன் , தேன்மொழி மாணிக்கம் ஆகிய இரு பெண்களை சிங்காரி அறக்கட்டளை வானூர்தி மூலமாக போபாலுக்கு அழைத்துச் சென்று விருதினை கொடுத்து அனுப்பி உள்ளது சிங்காரி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை போபால் விசவாயு தாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளை ஆகும். போபாலில் விச வாயு தாக்கி பல்லாயிரம் மக்கள் இறந்து போயினர். அதற்கு உரிய இழப்பீடு அரசு இது வரை கொடுக்கவில்லை. இந்த ஆண்டோடு அந்த துயரச் சம்பவம் நடந்து 28 ஆண்டுகள் ஆகின்றன . அந்த நாளை நினைவு கூறும் வகையில் அணு உலைக்கு எதிரான பெண்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுள்ளது. இதே அணு உலைப் போராளிகளை தீவிர வாதிகள் என்று தமிழக அரசு போலியாக முத்திரை குத்தி அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது என்பது வேதனைக்குரிய விடயம் .