
இதன்படி, 75 ஆண்டுகள் முடிந்ததையொட்டி, அதன் பவள விழா நிகழ்ச்சியும், அதேபோல 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக 1937ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் அறுபதாண்டுகள் நிறைவையொட்டி வைர விழா நிகழ்ச்சியும் இணைக்கப்பட்டு 14-7-1997 அன்று மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.
எனவே சட்டமன்றப் பவள விழாவும், பேரவை வைர விழாவும் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது எப்படியாவது ஒரு விழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக வழி என்ன என்று பார்த்து, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, குடியரசு பெற்ற பிறகு, 1952ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது என்பதைக் கூறி, அது முதல் கணக்கிட்டால் அறுபதாண்டுகள் என்பதால் வைர விழா வினை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். விழா சிறப்பாக நடக்கட்டும். அதுப்பற்றி காழ்ப்பில்லை.
ஆனால் திடீரென்று இந்த ஆட்சியில் இப்படியொரு வைர விழா கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்ன?. தி.மு.க ஆட்சிக் காலத்தில் புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்கி, அங்கே நிதிநிலை கூட்டத் தொடர் உட்பட ஒரு சில சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்று, தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் புதிய அத்தியாயம் நிலை பெற்ற பிறகும், தலைமைச் செயலகமும், சட்டப் பேரவையும் நிரந்தரமாக ஓமந்தூரார் வளாகத்திலேயே அமைந்து விடக் கூடாது என்பதற்காகத்தான், வைரவிழா வளைவு, வைர விழா போன்றவைகளை திடீரென்று நடத்த முற்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வைரவிழா நிகழ்ச்சிகாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழிலும், அதன் கவரிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் இருக்கிறதே தவிர, விழாவிற்கு முக்கிய விருந்தினர்களான குடியரசுத் தலைவரின் படமோ, ஆளுநரின் படமோ இடம் பெறவில்லை என்பதும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மரபு இந்த அளவிற்குப் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே , செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, சட்டப்பேரவை வைரவிழா கொண்டாட்டத்தில் திமுக பங்கேற்காது என்றார்.