Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அம்மாவின் கைபேசி திரைவிமர்சனம்


தலைப்பே நெகிழ்வாக இருக்கிறதே. படத்தை பார்த்து முடித்ததும் அம்மாவுக்கு ஒரு போன் செய்து ”அம்மா..என்ன மன்னிச்சுரும்மா. இந்த பாவி செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லம்மா. தீபாவளிக்கு நீ சுட்ட கேசரியை உருட்டி ஒடஞ்சி போன டேபிளுக்கு முட்டு குடுத்து உன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குன ராட்சசன் நாந்தாம்மா. நாந்தாம்மா…” என்று கதறி அழ ஒரு சந்தர்ப்பம் கிடக்கும் என்றெண்ணி மனக்கோட்டை கட்டி இருந்தேன். ஆனால் சினிமா, ட்ராமா இரண்டுக்கும் இடைப்பட்ட திரிசங்கு வகையறா படங்களை எடுக்கும் தங்கர் பச்சானின் இந்த மண்வாசனைப்படம் எனது கனவில் 200 லாரி மண்ணை கொட்டி விட்டது.

தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி நாவலை படமாக்க அரும்பாடு பட்டிருக்கிறார் தங்கர். பார்த்த நாமும்தான். நெறியாள்கை, ஒளி ஓவியம், அடவுக்கலை(நடனம்) என தங்கரின் தமிழ்ப்பற்று டைட்டிலில் வியாபித்து இருக்க..தொடங்குகிறது கதை. ஏகப்பட்ட பிள்ளைகள் பெற்ற அம்மாவாக ரேவதி(தனிப்பிறவியில் எம்.ஜி.ஆரின் தங்கையாக வருபவர்).

கடைக்குட்டிதான் அண்ணாமலை(சாந்தனு). வெட்டிப்பய. குடும்பமே அவனை தண்டச்சோறு என்று ஏச அம்மா மட்டும் ‘நவம்பர் போயி டிசம்பர் வந்தா டாப்பா வருவான்’ என்று ஆதரவு தருகிறார். ஒரு நாள் குடும்ப காது குத்து விழாவில் நகைகள் காணாமல் போக அதை அபேஸ் செய்தது சாந்தனுதான் என்று எண்ணி அவருடைய அண்ணன் செருப்பால் அடிக்கிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது. அடி, அவமானம் இரண்டிலும் இருந்து மகனை காக்க அம்மா துடைப்பத்தால் அவனை லேசாக ‘டச் அப்’ செய்து வெளியே அனுப்புகிறார்.

ஸ்ஸ்..யப்பா. என்னடா இது ‘சொல்ல மறந்த கதை’யில் பிரமிட் நடராஜன் தன் மருமகன் சேரனை தெருவில் தள்ளி செருப்பால் அடித்து காறி உமிழும் ஓவர் ஆக்டிங் காட்சி போல இருந்து விடுமோ என்று கொதித்து வீட்டுக்கு ஓட நினைத்தேன். நல்லவேளை சாந்தனுவை யாரும் துப்பவில்லை. அத்தோடு ஊரை விட்டு போகிறார் அவர். ஏழு ஆண்டுகள் அவரை எண்ணி அம்மாவும், மாமன் மகள் இனியாவும் உருகி இளைக்கின்றனர். ‘இது ஆகுறதில்லை’ என்று கடைசியில் இருட்டுக்கடை அல்வாவை ஹீரோவுக்கு பார்சல் அனுப்பிவிட்டு வீட்டில் பார்க்கும் நபரை கல்யாணம் செய்து கொள்கிறார் இனியா.

நாயகன் பெயர் ‘அண்ணாமலை’. அப்பறம் என்ன? படிப்படியாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் தம்பி. அம்மாவிற்கு ஒரு கைப்பேசியை அனுப்பி அதன் மூலம் அவ்வப்போது பேசுகிறார். சுமாராக நடிக்கிறார். தனக்கு கைவசமான தொடை நடுங்கி கேரக்டரில் தங்கர். இவர் உட்பட கிட்டத்தட்ட எல்லாரும் நடிப்பை ரைஸ்மில்லில் பதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் கிளிசரின் போட்டு அழ எத்தனை அட்டெம்ப்ட் போட்டாலும் முடியவில்லை.

கிராமத்து ஆடு, கோழி, நாய், படகுத்துறை, தெருக்கூத்து உள்ளிட்ட சகலமும் வழக்கம்போல் ஒளி ஓவியரின் படத்தில் ஆஜர். இசை ரோஹித் குல்கர்னி. ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. சாந்தனுவை பார்த்து அழகம்பெருமாள் ‘சார்னு கூப்பிடாம ஐயான்னே கூப்பிடு. அதுதான் சரி. எந்த வெள்ளைக்காரன் சந்திச்சிகிட்டாலும் ‘சார்’ போடுறது இல்லை’ வசனம் மட்டும் நன்று.

அம்மாவின் கை(ப்)பேசியை மையமாக வைத்து உருக்கமான கதையை சொல்வார் இயக்குனர் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தங்கரின் பிற படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் 50% கூட இப்படம் ஏற்படுத்தாது வருத்தமே. தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவராக இதில் தங்கர் நடித்து இருக்கிறார். மண்சார்ந்த கதைகளை சரியான சினிமாவாக பதிவு செய்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நெறியாலும் திறனை அடுத்த படைப்பிலாவது செவ்வனே செய்வாரா? எழுந்திரிங்க தங்கர். எழுந்திரிங்க.

‘உங்களுக்கெல்லாம் டூ பீஸ் ட்ரெஸ் போட்டு தைய தக்கன்னு ஆடனும், ஹீரோ நூறு பேரை வெட்டனும். அப்பதான்டா பாப்பீங்க. தாய் மண் மேல பற்று இல்லாத பதருங்க. உங்களுக்கு இப்படி படம் எடுத்தா எப்படி பிடிக்கும்?’ன்னு சவுண்டு விட்டுட்டு எத்தனை பேர் அருவாளை தூக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தாலும் சரி. ரெண்டுல ஒண்ணு பாத்துடறேன். படம் பாத்த எனக்கு இருக்குற வெறிக்கு….வாங்க. அப்ப தெரியும்!!!!
[vuukle-powerbar-top]

Recent Post