காவிரியில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம்கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இன்று காவிரி பாதுகாப்பு கமிட்டி முழு அடைப்பு நடத்துகிறது. இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட்டுள்ளது.
மாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் இன்றி தவித்து வருவதாக கூறியுள்ள அந்த கமிட்டியின் தலைவர் மாதே கவுடா, நீதிமன்ற தீர்ப்பை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக அரசு, இரவோடு இரவாக தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை வன்மையாக கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்தை இன்று நடத்துவதாகவும் மாண்டியா மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய போராட்ட அறிவிப்புகள் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைப்பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.