தாலுகா அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை கண்டித்து மனுக்களை வானத்தில் பறக்கும் பட்டாசில் கட்டி பறக்கவிடும் நூதன போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா அலுவலகம் முன்பாக தமிழக உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாலுகா அலுவலக நிர்வாகத்தை கண்டித்தும், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக் கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. ஆரணி ஒன்றிய தலைவர் வி.எம்.குப்பன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் வழங் கப்பட்டது.
பின்னர் புகார் மனுக்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை கண்டித்து மனுக்களை வானத்தில் பறக்கும் வெடியில் கட்டி பறக்க விட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் வி.ஜி.புருஷோத்தமன், மாவட்ட துணை தலைவர் சச்சிதாந்தம், பெருமாள், மு.லட்சுமணன், முருகன், வேலாயுதம், சிவலிங்கம், மாரி, ரவி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.