Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டி இல்லை! வைகோ அறிவிப்பு



கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற ஆளுங்கட்சி அராஜகம், வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க, கோடிகோடியாகக் கொட்டப்பட்ட ஊழல் பணம், இவற்றால், தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அன்றைய எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அதற்குப்பின்னர் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆனால், மார்ச் மாதம் நடைபெற்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், முன்னைய ஆளுங்கட்சி செய்த அதிகார அத்துமீறல்களையே இன்றைய ஆளுங்கட்சியான அண்ணா தி.மு.க. அப்பட்டமாகச் செய்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் பல்லாயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, கோடிகோடியாக ஊழல் பணத்தைக் கொட்டி, வாக்காளர்களின் ஏழ்மையை, இல்லாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைக்கு வாங்கியது. இதில் தானும் சளைக்கவில்லை என்ற விதத்தில், தி.மு.கழகமும், வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கில் செலவழித்தது.

திருமங்கலம் இடைத்தேர்தலின்போதாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா அவர்கள், அதிகார அத்துமீறலைத் தடுக்க முயற்சி மேற்கொண்டார். அப்போது, ஆளுங்கட்சிக்குக் காவல்துறை குற்றேவல் புரிந்ததால், பணப்பட்டுவாடாவை அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரியான பிரவீண்குமார், அதிகார அத்துமீறல்களைத் தடுக்க, ஒப்புக்குக்கூட, ஒரு நடவடிக்கை எடுத்ததாகக் காட்டிக் கொள்ளக்கூட முயலவில்லை.

முதல் அமைச்சர் பிரச்சாரம் செய்ததற்கு மறுநாள், மார்ச் 15 ஆம் தேதி, தொகுதி முழுக்க ஆளுங்கட்சி பணம் பட்டுவாடா செய்தது. ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஆளுங்கட்சியினர், கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டபோதும், எந்த நடவடிக்கையையும், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்கொள்ளவில்லை.

ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்களைப் பிடித்துக் கொடுத்தவர்கள் மீது, காவல்துறை பொய்வழக்குப் போட்டது. தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் பார்வையாளருக்கும், ஆதாரங்களோடு புகார் கொடுத்தேன்.

ஆனால் அதற்கு மறுநாளான வாக்குப்பதிவு நாள் வரையிலும், தொகுதிக்குள் எங்கேயும் தலைகாட்டாத தேர்தல் பார்வையாளர், குதிரை கீழே தள்ளியதோடு, குழியும் பறித்த கதையாக, தொகுதியில் பணம் எங்கும் கொடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்து எந்தப் புகாரும் தனக்கு வரவில்லை என்றும், அப்பட்டமான பொய்களை வாக்குப்பதிவு அன்றே சொன்னார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள், தங்கள் சக்திக்கு மீறி கைக்காசைச் செலவழித்து, வீதிவீதியாக வீடுவீடாக, வாக்காளர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்டு, ஜனநாயகக் கடமை ஆற்றினர். ஆனால், ஆளுங்கட்சி, ஆண்ட கட்சியின் பணப்பட்டுவாடாவால், அனைவரின் கண்முன்னாலேயே ஜனநாயகத்தின் மென்னி முறிக்கப்பட்டது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும், ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கும், அராஜகம் பகிரங்கமாக அரங்கேறப் போகிறது. தமிழ்நாட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி, ஆளுங்கட்சிக்கு ஏஜெண்டாகச் செயல்படுகின்றார். தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, புதுக்கோட்டை நகராட்சிக்கு 50 கோடி ரூபாய் அரசு நிதிஉதவி ஒதுக்கி இருப்பதும், 32 அமைச்சர்கள் புதுக்கோட்டையில் முகாம் இடுவதும், அதற்கான ஏற்பாடுகளே ஆகும்.

இடைத்தேர்தலில், இப்படி நடைபெறுகின்ற அநீதியை, ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பங்கு ஏற்பது இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு எடுத்து உள்ளது.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
08.05.2012 மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post