Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நி(த்)தியானந்தாக்கு எதிராக வழக்கு தொடர்வதை நான் ஆதரிக்கிறேன் ! காஞ்சி சங்கராச்சாரியார்



ஆன்மிக விதிமுறைகளை மீறி நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதீனம் பட்டம் சூட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறினார்.

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நேற்று காலை கிருஷ்ணகிரி கிருஷ்ணர் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஜகத்குரு சங்கர மடத்திற்கு வந்தார். அங்கு நந்தன வருட பஞ்சாங்க புத்தகத்தை அவர் வெளியிட்டார். இதையடுத்து ஜெயேந்திரர் சுவாமிகள் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். குறிப்பாக காசி, நேபாளம், பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த விராத் நகர், பீகார் பூரி மடம் ஆகிய இடங்களுக்கு சென்று உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டேன்.

நாட்டில் ஆன்மிகம் வளர்ச்சியடைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் குடும்பங்களில் கூட ஆன்மிகம் வளர்ச்சி அடைந்துள்ளது தெரியவருகிறது.

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.

இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும்.

ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.

தமிழக அரசு ஆன்மிகவாதிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. புதிய ஆண்டான நந்தன வருடத்தில் பொதுமக்கள் சகல வசதிகளையும் பெற்று சந்தோஷமாக, ஆனந்தமாக இருப்பார்கள். நந்தனம் என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் ஆனந்தம் என்று பெயர். அதனால் பொதுமக்கள் நந்தன ஆண்டில் அனைத்து வளங்களையும் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள்.

இவ்வாறு ஜெயேந்திரர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post