சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை 16-ந் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாளை (புதன்கிழமை) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய கோரிக்கைகளும், வியாழக்கிழமை செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆகிய கோரிக்கைகளும், 11-ந் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, (12, 13-ந் தேதிகள் விடுமுறை) 14-ந் தேதி வனத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, 15-ந் தேதி பொதுத் துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, 16-ந் தேதி சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் ஆகிய பணிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த தகவலை சட்டமன்ற செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.