Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைப் பிரச்சினை குறித்து மன்மோகன் - ஹிலாரி பேச்சு



இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்ரன் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்தினார்.

இந்தியாவுக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஹிலாரி நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

உலகப் பொருளாதாரம் மற்றும் தீவிரவாத ஒழிப்புக் குறித்து இந்தப் பேச்சின் போது விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்தமை குறித்தும் இதில் பேசப்பட்டது. அத்துடன் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் இதற்காக இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகிப்பது எனவும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சின்போது உடன்பாடு தெரிவித்தனர்.

அத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிகளை ஏற்படுத்துவதற்காக தமிழ்க் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது. இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான பெறுபேறுகளை அமெரிக்க வெளியுறவுச் செயலர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டறிந்து கொண்டதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறின.
[vuukle-powerbar-top]

Recent Post