தர்மபுரியில் நள்ளிரவில், பிரபல நகைக்கடையில் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இரவு நேரத்தில் இந்த நகைக்கடையின் கதவு திறக்கப்பட்டால் உடனடியாக எந்த கதவு திறக்கப்படுகிறது என்று அதன் பங்குதாரர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செல்லும் வகையில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில், வழக்கம்போல் நகைக்கடை நேற்று முன்தினம் இரவு பூட்டப்பட்டு சாவியை பங்குதாரர்கள் எடுத்துச்சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் 9 பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் நகைக்கடையின் மேல் மாடிக்கு சென்றது. அவர்கள் 4-வது மாடியின் கதவை கியாஸ் வெல்டிங் மூலம் திறந்தனர்.
அந்த கதவு திறந்தவுடன் நகைக்கடையின் பங்குதாரர் சக்திவேல் என்பவருக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதையடுத்து உஷாரான அவர் இதுகுறித்து தர்மபுரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் தன்னுடன் உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சக்திவேல் நகைக்கடைக்கு விரைந்தார்.
அதிரடிப்படை போலீசாரும் நகைக்கடைக்கு வந்தனர். அந்த நேரத்தில் சக்திவேலுக்கு மேலும் 2 கதவு திறக்கப்பட்டது என்று எஸ்.எம்.எஸ். வந்தது. கொள்ளையர்கள் கடையின் உள்ளே இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் சிலர் ஒரு லாட்ஜின் வழியாக நகைக்கடையின் மேல் மாடிக்கு சென்றனர்.
நகைக்கடை உரிமையாளர் மற்றும் போலீசார் சிலர் கடையின் மெயின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது நகைக்கடையின் 3-வது தளத்தில் இருந்த 9 கொள்ளையர்களையும் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். கடைக்குள் இருந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரூ.5 கோடி மதிப்புள்ள வைரம், பிளாட்டினம், தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அனைவரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.
அயூஷ், 2.
முகமதுயூசுப், 3. சங்கர்மண்டல், 4. மிதுன்மண்டல், 5. அக்தர், 6. ஷபி, 7. ஷேக்பக்ரூதின், 8. முகமதுரபிக், 9. முகமது பைரோஸ்கான். இவர்கள் அனைவரும் 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் 9 பேரையும் தர்மபுரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீசார் அவர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:-
கொள்ளையர்களில் 6 பேர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இந்த நகைக்கடை அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அப்போது அவர்கள் தாங்கள் தேங்காய் வியாபாரத்துக்காக இங்கு வந்து உள்ளோம் என்று லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
பின்னர் மேலும் 3 பேர் அவர்களுடன் தங்கிக்கொண்டனர். பின்னர் நள்ளிரவில் தாங்கள் திட்டமிட்டப்படி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளனர்.
மேலும் விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கொள்ளை கும்பல், நகைக்கடையின் அருகே உள்ள செல்போன் கடையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளை அடித்து இருப்பது தெரியவந்தது. இதேபோல வேறு பகுதிகளில் நடந்த கொள்ளைகளிலும் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூரில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது தர்மபுரியில் கைதான வடமாநில கொள்ளையர்களுக்கு திருப்பூர் நகைக்கடை கொள்ளையிலும் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவர்கள் இந்தியாவில் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் என்றும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிறப்பு தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தர்மபுரி போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.