Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருவள்ளுவருக்கு மணி மண்டபம் அமைத்து தினசரி திருக்குறள் படித்து வழிபாடு செய்யும் கிராமம்!


திருவள்ளுவருக்கு மணி மண்டபம் அமைத்து தினசரி திருக்குறள் படித்து வழிபாடு செய்யும் கிராமம்! 

வில்வாரணி என்னும் சிற்றூர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த சிற்றூரில் திருக்குறள் நெறி பரப்பும் மையம் ஒன்றை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருக்குறள் சாமிநாதன். இவரது பெரும் முயற்சியாலும் பலரது நன்கொடையாலும் உருவானது தான் திருவள்ளுவருக்கு என ஒரு மணி மண்டபம் . தமிழ்நாட்டில் பல தெய்வங்களுக்கும் தலைவர்களுக்கு பல்லாயிரம் மணிமண்டபங்கள் இருந்தாலும் உலகம் போற்றும் வள்ளுவருக்கு மணிமண்டபங்கள் கோவில்கள் என்பது அரிதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வான் புகழ் அளித்த வள்ளுவருக்கு தமிழர்கள் வெகு குறைவான மணி மண்டபங்களே கட்டி உள்ளனர் என்பதும் வேதனையான செய்தி. 

வில்வராணி கிராமத்தில் சாமிநாதன் அய்யாவின் அவர்கள் கடுமையான போராட்டத்திற்கு பின்பு தான் இந்த மணிமண்டபத்தை கட்டி முடித்தார். காரணம் அரசு இவருக்கு இடம் கொடுக்கவில்லை. பல வழிகளில் போராடி இறுதியில் அவரின் வீட்டிற்கு அருகே உள்ள தொடக்கப் பள்ளியின் முன்பு அவருக்கு இடம் ஒதுக்கியது அரசு . அந்த இடத்தில வள்ளுவரின் சிலையை நிறுவி ஒரு சிறிய மணிமண்டபத்தை கட்டி முடித்தார் சாமிநாதன் . இப்போதும் பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள் அனைவரும் இங்கு வந்து வள்ளுவரை வணங்கிய பின்பி தான் பள்ளிக்கு செல்கின்றனர். தினமும் பள்ளிப் பிள்ளைகளே மணிமண்டபத்தை கூட்டி சுத்தம் செய்கின்றனர். பின்பு அவர்கள் வள்ளுவரின் சிலையின் முன்பு தீபம் ஏற்றி திருக்குறளில் உள்ள ஏதேனும் ஒரு முழு அதிகாரத்தையும் படித்து வழிபாடு செய்கின்றனர். இந்த மணிமண்டபத்தின் வெளியே தினமும் திருக்குறளும் பொருளும் எழுதப்பட்டு வருகிறது . இந்த ஊரில் உள்ள பலரது வீடுகளில் திருக்குறள் எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலும் இங்கு உள்ள குழந்தைகள் திருக்குறளை மனப்பாடமாக சொல்கின்றனர். 1330 திருக்குறளையும் பார்க்காமல் ஒப்பிக்கும் மாணவர்களும் இங்கு உண்டு. 

நாம் இங்கு சென்ற வேளையில் பல மாணவர்கள் நம்மிடம் திருக்குறள் சொல்லி பரிசுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர். இந்த கிராமத்தை திருக்குறள் கிராமம் என்று அழைத்தால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு இந்த கிராம மக்கள் திருக்குறள் மீது பற்றோடு உள்ளனர். இந்த மணி மண்டபத்தை காண்பதற்கு நாம் அங்கு சென்ற போது திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி எவ்வாறு விளக்கப் பட்டுள்ளதோ அவ்வாறே நமக்கு விருந்தும் உபசரிப்பும் நடந்தது. சாமிநாதன் அவர்களின் மனைவி காலமாகிவிட்டார் என்ற செய்தியை நமக்கு சொன்னார்கள் . அவர் உயிரோடு இருக்கும்போது ஒரு சமயம் வள்ளுவரின் சிலை வெட்ட வெளியில் மழையில் நனைந்ததாம் . அப்போது அதை பொறுக்க முடியாமல் குடையை வைத்து மழை நீர் வள்ளுவரின் மேல் படாதவாறு பார்த்துக் கொண்டாராம் சாமிநாதன் அய்யாவின் மனைவி. அந்த அளவிற்கு அவரது குடும்பமும் திருவள்ளுவரின் மீது பற்றுடையவர்கள் . இன்று சாமிநாதன் அய்யாவின் மகன் மற்றும் பேரன் ஆகிய இருவரும் வள்ளுவரின் மணிமண்டபத்தை பராமரித்து வருகிறார்கள். 

இவர்களை போல் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களுக்கும் ஒருவர் இருந்தால் வள்ளுவரும் வள்ளுவமும் நாடெங்கும் தழைத்து ஓங்கும் . வள்ளுவர் புகழ் வாழ்வாங்கு வாழும் . வாழ்க இவர்களின் தொண்டு.

நன்றி - தமிழர் பண்பாட்டு நடுவம் 










































[vuukle-powerbar-top]

Recent Post