Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சமய திருவிழாக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குக ! அரசுக்கு வைகோ வேண்டுகோள்

கடந்த காலத்தில் கோயில்களில் அடிக்கடி உயிரிழப்பு அசம்பாவிதங்கள் இடம்பெறுகிறது. இதனை அரசு கருத்தில் கொள்ளவேண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வைகோ தமிழக அரசுக்கு அறிக்கை விட்டுள்ளார்.

கடந்த ஒரு வார காலத்துக்குள், தமிழகத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மற்றும் நாகூரிலும் நடைபெற்ற சமய ஊர்வலங்களில், மின்சாரம் தாக்கி ஏழு பேர்களும், தேர் குடை சாய்ந்து மக்கள் கூட்டத்தில் விழுந்ததில் ஐவரும் உயிர் இழந்து உள்ளனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், சென்னல்குடி கிராமத்தில் பெருமாள்கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் பல்லக்கை ஊர்வலமாகக் கொண்டு செல்கையில், பொட்டல்பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிர்நீத்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.  

சென்னல்குடியைச் சேர்ந்த மாரீஸ்வரன் (வயது 17), அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்மேகக் கண்ணன் (வயது 15), மற்றும் பொட்டல்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் அழகுராஜ் (வயது 19) ஆகிய மூவரும் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்து உள்ளார்கள். குடும்பத்தினரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் பெற்றோர்கள், உற்றார் உறவினர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மேற்கண்ட விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு தக்க உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோல, பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்கின்ற இடங்களில், நெரிசல் ஏற்படவும், அதனால் பலர் மயங்கிச் சரிவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. 

ஏடுகளில் வெளியாகின்ற திருவிழா படங்களைப் பார்க்கையில், ஒரே இடத்தில் இலட்சக்கணக்கான மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதைக் காண முடிகின்றது. அதுபோன்ற இடங்களில், ஒருசிலரின் தவறான நடவடிக்கைகளாலும், உற்சாக மிகுதியாலும், எல்லை மீறிய கொண்டாட்டங்களாலும் பெரும் விபரீதங்கள் நேர வாய்ப்பு இருக்கின்றது. அத்தகைய இடங்களிலும், சமய ஊர்வலங்கள் செல்கின்ற சாலைகளிலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா என்பதை, காவல்துறையினரும், உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முன்னதாக ஆய்வு செய்ய வேண்டும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.  

‘தாயகம்’ வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 09.05.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post