Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏர்செல்-மேக்சிஸ் பேரத்தில் ப.சிதம்பரம் பதவி விலகக்கோரி பாராளுமன்றத்தில் கடும் அமளி


ஏர்செல்-மேக்சிஸ் பேரத்தில் ப.சிதம்பரம் ராஜினாமா செய்யக்கோரி, பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கடும் அமளியில் ஈடுபட்டன. இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, தனது மகன் கார்த்தி சிதம்பரம் பலன் அடைகிற விதத்தில், ஏர் செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்தார். 

ஏர்செல் நிறுவனத்துக்கும், கார்த்தி சிதம்பரத்தின் ஏ.எஸ்.சி.பி. நிறுவனத்துக்கும் இடையே பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது'' என குற்றம் சாட்டினார். 

இந்தக் குற்றச்சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். இதே போன்று மத்திய அரசும் மறுப்பு வெளியிட்டது. மத்திய அரசின் மறுப்பை நிராகரித்து நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில், ஏர்செல்-மேக்சிஸ் பேர அனுமதி விண்ணப்பத்தை ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது, அவரது துறையின்கீழ் வரும் அன்னிய முதலீட்டு தோற்றுவிப்பு வாரியம் (எப்.ஐ.பி.பி.) பல மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டதாக ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி கூறிய குற்றச்சாட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையை அரசு ஆராய வில்லை அல்லது ப.சிதம்பரத்தை காப்பதற்காக வேண்டுமென்றே உண்மைத்தகவல்களை மறைக்கிறது என கூறப்பட்டு உள்ளது. 

இது தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று எழுப்பினர். ஏர்செல்-மேக்சிஸ் பேரத்தில் மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்துக்கு பங்கு உண்டு என்று கூறி, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

ஏர்செல்-மேக்சிஸ் பேரத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு பற்றி வெளியான ஆங்கில நாளிதழின் பிரதிகளை பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தூக்கிக்காட்டியவாறு சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷங்களை முழங்கினர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து சபையை நண்பகல் 12 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு சபாநாயகர் மீராக்குமார் ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் நண்பகலில் கூடியது. அப்போது மறுபடியும் ப.சிதம்பரம் விவகாரம் சூடு பிடித்தது. இதனால் பகல் 121/2 மணி வரை சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து சபை 121/2 மணிக்கு கூடியபோதும் ப.சிதம்பரம் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. 

சபையை நடத்த இயலாத அளவுக்கு அமளி ஏற்பட்டது. இதனால் பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைவரை பாராளுமன்றத்தில் எந்தவொரு அலுவலையும் நடத்த இயல வில்லை. டெல்லி மேல்-சபையிலும் இந்தப் பிரச்சினை எழுந்தது. அப்போது பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி ராஜீவ் சுக்லா, பத்திரிகைச் செய்தியை திட்டவட்டமாக மறுத்தார். அதில் உண்மை இல்லை, முழுமையாக அடிப்படை அற்றது என்று அவர் கூறினார். கடந்த மாதம் 28-ந் தேதி அரசு வெளியிட்ட மறுப்பையும் மந்திரி ராஜீவ் சுக்லா சுட்டிக்காட்டினார். 

"வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன, ஏர்செல்-மேக்சிஸ் பேரம் தொடர்பான விண்ணப்ப அனுமதியில் தாமதம் ஏற்படுத்தப்படவில்லை'' எனவும் அவர் விளக்கம் அளித்தார். 

ஆனால், உள்துறை மந்திரி ப..சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா, அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர். இதையடுத்து சபை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post