Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோடை விடுமுறையை மாணவர்கள் கழிக்க வேடந்தாங்கல் அழைக்கிறது ! 30 ஆயிரம் பறவைகள்

கோடையிலும் ரம்மியமான சூழல் நிலவுவதால், வேடந்தாங்கலில் 30 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் தங்கியுள்ளன. ஏரியில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் சீசன் ஜுலை மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் என்று பெயர் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது, வேடந்தாங்கல் ஏரி நிரம்புவதால், அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்குகின்றன. டிசம்பர் மாதம் பெரும்பாலான நாடுகளில் இருந்து பறவைகள் வந்துவிடுவதால் சீசன் களைகட்ட தொடங்கிவிடும்.

வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர்க்கடப்பை மரங்களில் கூடுகள் கட்டி தங்கத் தொடங்கும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனம்பெருக்கம் செய்ய தொடங்கிவிடுகின்றன. மீன், பூச்சி இனங்களை உண்ணும் இந்த பறவைகள் உணவுக்காக அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கும் சென்று வருகின்றன.  ஜுன் மாதம் வரை ஏரியில் நீர் இருப்பு உள்ளதால், அதுவரை அங்கேயே வெளிநாட்டு பறவைகள் தங்கிவிடுகின்றன. 

அதன் பின்னர், சொந்த நாடுகளுக்கு பயணத்தை தொடங்கும் பறவைகள் மீண்டும் சீசன் தொடங்கும் அக்டோபர் மாதத்தில்தான் வருகை புரியும். அந்த வகையில், இந்த ஆண்டு வேடந்தாங்கலுக்கு சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வந்துள்ளன. 

நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், கரண்டி வாயன், தட்டவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வக்கா என பறவைகளின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  தற்போது, கோடை வெயில் அதிகரித்தாலும், வேடந்தாங்கல் ஏரியில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், 30 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் அங்கு தங்கியுள்ளன. 

இரைக்காக பறவைகள் அங்கும், இங்கும் பறந்து சென்று வருவதால், வேடந்தாங்கல் ஏரியே சுறுசுறுப்பாக காணப்படுகிறது.  சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வேடந்தாங்கல் சரணாலயம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி திறக்கப்பட்டது. தற்போது, கோடை விடுமுறை என்பதால், குடும்பத்துடன் வேடந்தாங்கலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விதவிதமான பறவைகளை கண்டு குழந்தைகள் ரசித்து செல்கின்றனர். 

சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்காக, ஏரிக்கரையில் புதிதாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. பறவைகளை கண்டுகளிப்பதற்காக 2 இடங்களில் புதிதாக மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆனால், ஏரியில் பின்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான நீர்க்கடப்பை மரங்கள் பட்டுப்போய் உள்ளன. 

இதனால், இனிவருங்காலங்களில் வெளிநாட்டு பறவைகளுக்கு இருப்பிட பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, ஏரியில் புதிதாக நீர்க்கடப்பை மரங்களை நடவேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டு ஏரியில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், வெளிநாட்டு பறவைகள் தொடர்ந்து தங்கியுள்ளன. 

எனவே, ஜுலை மாதம் இறுதி வரை சீசன் நீடிக்க வாய்ப்புள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 30 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் இருந்தாலும், பகல் நேரத்தில் அவைகளை முழுமையாக காண முடியாது. ஏனென்றால், பெரும்பாலான பறவைகள் இரைகளைத்தேடி அருகில் உள்ள மதுராந்தகம் ஏரி, உத்திரமேரூர் ஏரி ஆகிய இடங்களுக்கு சென்றுவிடுகின்றன.  

இதனால், குறைந்த அளவு பறவைகளே பகல் நேரத்தில் உள்ளன. அனைத்து பறவைகளையும் கண்டுரசிக்க வேண்டும் என்றால், காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை 4 மணிக்கு பிறகும் அங்கு சென்றால், எல்லா பறவைகளையும் கண்டு ரசிக்கலாம்.
[vuukle-powerbar-top]

Recent Post