இந்திய வரலாற்றில் முதல் முறையாக 25,௦௦௦ வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைத்த தமிழக மக்கள்.
இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை. இவ்வளவு தொகையான மக்கள் ஒரு கோரிக்கைகாக இப்படி ஒரு செய்கையை செய்ததுமில்லை.இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் பின்னைடைவை தேடித் தந்துள்ளது.
கூடங்குளத்தைச் சுற்றியுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 ஆயிரம் பேர், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசிடம் திரும்ப கொடுத்துவிடுமாறு, அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அணுஉலையை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், இவ்வளவு பேர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அரசு அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாததாலும், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்று இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி, கூடுதாலை, வைராதிகிணறு, தோமையார்புரம், கூட்டுப்பணை ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
புதன்கிழமை அன்று மீதிமுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை உதயகுமாரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னிடம் பொதுமக்கள் ஒப்படைத்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ராதாபுரம் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்ற உதயகுமார், அங்கு தாசில்தாரிடம் இதனை தெரிவித்துள்ளார்.வாக்காளர் அடையாள அட்டை வாங்கக் கூடிய அதிகாரம் எனக்கு இல்லை. இருந்தாலும் என்னிடம் புதன்கிழமை (09.05.2012) கொடுங்கள். நான் இந்திய தேர்தல் ஆணைத்துக்கு தெரியப்டுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அரசும் தமிழக அரசும் பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காததால் , இனி வாக்களிக்கும் உரிமை தங்களுக்கு வேண்டாம் எனவும், யாருக்கும் இனி வாக்களிக்க மாட்டோம் எனவும் கூறி அணு உலைக்கு எதிரான மக்கள் இப்படி செய்துள்ளனர். மேலும் இந்தியா போன்ற பெயரளவில் குடியரசாக விளங்கும் நாட்டில் வாக்காளர் அட்டையை அரசுக்கே திரும்ப ஒப்படைத்து மக்கள் தங்கள் நாட்டின் மீதான அவ நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். இது உலக அளவில் இந்திய நாட்டிற்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்துள்ளது.