நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளித்திரையில் கால் பதிக்க வருகிறார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு.கடந்த ஓராண்டு காலமாக எந்த ஒரு புதிய தமிழ் படத்திலும் அவர் நடிக்காத பட்சத்தில், புதிய படமொன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த வருடம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில்,தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு,அத்தேர்தலில் அக்கட்சி படு தோல்வி அடைந்ததும், எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாத அவர், சில காலம் தலைமறைவாகி இருந்தார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் தயாராகி,நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த மம்மட்டியான் படம் அண்மையில் திரைக்கு வந்தது.இப்படத்திலேயே நடிகர் வடிவேலு இறுதியாக நடித்திருந்தார்.
தற்போது,இயக்குனர் வாசு பாஸ்கர் இயக்கும், முழுக்க முழுக்க புது முகங்கள் நடிக்கும் மறுபடியும் ஒரு காதல் படத்தில்,சிங்காரம் எனும் கதாபாத்திரத்தில் போலி மருத்துவராக படம் முழுவதும் நடிக்கவுள்ளார் நடிகர் வடிவேலு.