தமிழகத்தில் புதிதாக 9 தாலுகாக்கள் அமைப்பு ! சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 9 தாலுகாக்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 

மேலும் மாணவ- மாணவிகளுக்கு 6-ம் வகுப்பிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், கட்டுக்கோப்பான சமுதாய முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது, மக்களை நாடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதிலும், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வருவாய்த் துறை முக்கியப் பங்காற்றுவதுடன், நிர்வாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வருகிறது. 

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் நடவடிக்கைகள் எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்படுகின்றன. 

மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் வருவாய்த் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், தற்போதைய மக்கள் தொகையின் எண்ணிக்கை, மக்களின் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, வருவாய் வட்டங்களை சீரமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தினை பிரித்து திருப்புவனத்தில் ஒரு புதிய வட்டமும்; திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தினை பிரித்து கலசப்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும்; பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தினை பிரித்து ஆலத்தூரில் ஒரு புதிய வட்டமும்; கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து கிணத்துக்கடவில் ஒரு புதிய வட்டமும்; காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தினை பிரித்து திருப்போரூரில் ஒரு புதிய வட்டமும்; கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தினை பிரித்து அன்னூரில் ஒரு புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கராபுரம் வட்டங்களை சீரமைத்து புதியதாக சின்னசேலத்தில் ஒரு வட்டமும்; ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களை சீரமைத்து அந்திïரில் ஒரு புதிய வட்டமும், நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து, கொல்லிமலையில் ஒரு புதிய வட்டமும்; ஆக மொத்தம் 9 வட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும். இதுதவிர, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 62 வருவாய் வட்டங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து கால விரயம் இன்றி மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், வட்டாட்சியர் அலுவலகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, 4 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வருவாய் வட்டங்களைப் பிரிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசுக்கு பரிந்துரை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரைக் கொண்ட ஒரு அலுவலர் குழு அமைக்கப்படும். இக்குழு இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். இக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அரசு தக்க முடிவினை அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இது மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் பல்வேறு உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், அரசு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கும், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு 6-வகுப்பிலேயே தேவையான சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதன்மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6-ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவ-மாணவியர் பயன் பெறுவர். மேலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அதன்பின்னர் உரிய நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பொருட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்பதையும், இந்த நிலையம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி நிலையமாகவும் செயல்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.